சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தி வந்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தற்போது முன்னாள் அதிமுக எம்எல்ஏவான தி.நகர் சத்தியா, மறைந்த முன்னாள்அமைச்சர் மதுசூதனின் ஆதரவாளராக இருந்து, பழனிசாமிக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இது அதிமுகவினர் மத்தியில் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல், திமுக கூட்டணி கட்சிகளின் நிலை, அதிமுக – பாஜக உறவு, தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், விரைவில் கூட உள்ள மக்களவை கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த இருப்ப தாகவும் தெரிகிறது.