புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவை டாடா குழுமம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அந்த அறிக்கையில், டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர்’ என்று கூறியிருக்கிறார்.
மேலும் அந்த அறிக்கையில், “ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.
இன்று டாடா குழுமத்தின் ஆண்டு வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 8.4 லட்சம் கோடி ரூபாய்) மேலாக உள்ளது.
பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்படும். மகாராஷ்டிர அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது.
அவரது உடல் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை பொதுமக்கள் அஞ்சஅஞ்சலிக்காக என்.சி.பி.ஏ-வில் வைக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
அவரது மறைவுக்கு ஜார்கண்ட் மாநில அரசும் ஒருநாள் அரசு துக்கம் அறிவித்துள்ளது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பிரியாவிடை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.