தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது. இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் போனஸ் அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்து ஊழியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தான் தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே இவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2024-25ஆம் நிதியாண்டில் தீபாவளி சிறப்பு போனஸ் தொகை வழங்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படவுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள்
தகுதியுள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் போனஸ் தொகையாக பெறுவார்கள். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்கப்படும்.
உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள்
மேலும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதமும், கருணைத் தொகையாக 1.67 சதவீதமும் என மொத்தம் 10 சதவீதம் போனஸாக வழங்கப்படும். இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அடங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.