காவிரி விவகாரத்தில் எங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது உங்களுக்கு எப்படி தண்ணீர் தர முடியும் என்று கூறி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அராஜகத்தில் ஈடுபட்டார்.
கர்நாடகா – தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி என்னுமிடத்தில் காவிரி குறுக்கே மேகதாது அணைக்கட்ட தொடர்ந்து இடையூறு செய்வதையும், காவிரியில் நீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கன்னட சலுவலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கர்நாடகா ஜாக்ருதி வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து சாலையில் அமர்ந்து போராடிய நிலையில் வாட்டாள் நாகராஜ் சம்மதம் தெரிவிக்கும் வரை காத்திருந்த காவல் துறையினர் அவர் சம்மதம் தெரிவித்தவுடன் காவல் வாகனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏற்றினர். முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு கன்னடத்தில் பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், நான் கையில் காலி குடம் வைத்திருப்பது தான் எங்கள் மாநிலத்தின் நிலைமை. விவசாயம், குடிக்கவே நீரில்லை, இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புரியாமல் ஏன் அரசியல் செய்து வருகிறார். கிருஷ்ண ராஜ சாகர் அணை, ஹேமாவதி அணைகளில் நீர் இல்லை.
எங்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லை என்றால் பெங்களூரு கதி என்ன, அங்குள்ள தமிழர்களின் நிலை என்ன? முதல்வருக்கு உறவினர்கள் யாரும் கர்நாடகாவில் இல்லையா? இதில் தமிழக அரசு செய்வது சரியல்ல. தமிழக அரசை கண்டிப்பது எங்கள் நோக்கம் இல்லை. நீர் இருந்தால் கொடுப்போம் ஆனால் இப்போது இல்லை என கூறினார்.