சென்னை:
தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் நவம்பர் 15ம் தேதி பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர்.
தூத்துக்குடி நகராட்சி தலைவராக 1909 டிசம்பர் 21ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றதின் காரணமாக ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றவர்.
நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் “தூத்துக்குடி மக்களின் தந்தை” என மக்களால் போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களைப் போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் எனறு தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி உரிய அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையினை நாளை காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தமைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.