சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வேளாண்மைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு அதிகரித்துள்ளது.
- 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்.
- கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
- பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
- அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 2504 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும்.
- 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் – ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நெலுக்கு பின்னான் பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும். சம்பா நெல் அறுவடைக்குப் பின்னர் * சிறுதானியங்கள் பயறு உள்ளிட்ட சாகுபடிகள் ஊக்குவிக்கப்படுகிறது.
- 60 ஆயிரம் சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கப்படுகிறது.
- ஆதிதிராவிட, பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- மின்னணு வேளாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருளுக்கு பணமில்லா பரிவர்த்தனை.
- தென்னை வளர்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் அடைய தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும். ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க இந்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- பயிர் பாதிப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாநில அரசின் காப்பீட்டுக் கட்டண மானியத்திற்கு ரூ.2337 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார்.
- 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர்.
- கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- ராமநாதபுரத்தில் மல்லிகை செடிகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்யவும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் வேளாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.