கரூர்:
கரூர் மாவட்டம் ராயனூரில் இன்று 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மிகவும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஒரு வேலையை தொடங்கும்போது கிடைக்கும் உற்சாகம், வெற்றி கரூர் மாவட்டத்தை நம்பர் ஒன்றாக திகழ செய்கிறது. மற்ற மாவட்டங்களுக்கு கரூர் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்கிறது. கரூர் ஒரு தொழில் நகரம். லாரி மற்றும் பேருந்து பாடி கட்டும் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. கொசுவலை உற்பத்தியில் இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த வகையில், ரூ.1,800 கோடிக்கு கொசுவலை உற்பத்தி கரூரில் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு போர்வைகள் தயாரித்து இந்தியாவில் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இந்த 22 மாத ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு அமைச்சர செந்தில்பாலாஜியின் முன்னெடுப்பினால் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சமாவது பயனாளிக்கு சென்னையில் நடந்த விழாவில் நானும், முதல்வரும் அதற்கான உத்தரவினை வழங்கினோம். ஒரு லட்சத்து 50 ஆவது பயனாளிக்கு முதல்வரே இங்கு நேரில் வந்து வழங்கினார்.
கல்விக்கும், மருத்துவத்திற்கும் முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார். புதுமைப்பெண் திட்டத்தால் இன்றைக்கு உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 22 மாதங்களில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட இங்கு நேரம் போதாது. ஏற்கனவே மாயனூரில் கலைஞர் ஆட்சியில் 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவுக்கு தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது குளித்தலை மருதூர் மற்றும் நெரூர் ஆகிய இரண்டு இடங்களில் ரூ.1,450 கோடியில் தடுப்பணைகள் கட்ட முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் உங்களுடன் இருந்து, உங்களுக்கான உழைப்பவர்கள்தான் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. அரசு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சரின் திட்டங்கள் இன்றைக்கு நாடு முழுவதும் பரவி இருக்கிறது. முதல்வரின் திட்டங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்னும் இருக்கக்கூடிய 3 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கொடுத்த 100 சதவீத வாக்குறுதிகளையும் அவர் செய்து முடிப்பார். உங்களுக்கு என்ன தேவையோ, எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக, உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்து உழைக்க என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு