திருப்பூர் :
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் சம்பா நெற்பயிர் சாகுபடிக்காக வயல்களில் விதை நெல் விடும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. கீழ்பவானி பாசன பகுதிகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரை நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன்படி நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் முதல் கட்டமாக இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ.ஆர் 50, கோ.ஆர்.51, ஏ.டி.டி.45, வி.ஜி.டி.1, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக விதை நெல்களை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் சான்று பெற்ற விதை நெல்களை வாங்கி வந்து தங்களது வயல்களில் நாற்றங்கால் அமைத்து நெல் நாற்றுக்களாக மாற்றும் பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். நெல் நாற்றுக்கள் உற்பத்தி இதன்படி இப்பகுதி விவசாயிகள் கடந்த சில நாட்களாக நஞ்சை சம்பா நெல் சாகுபடி நடைபெறும் வேளாண் வயல்களில் ஒரு பகுதிகளில் சேற்று வயல் அமைத்து நீரை அதிக அளவு நிரப்பி அதில் விதை நெல் மணிகளை வயல் முழுவதும் தூவி விட்டு நெல் நாற்றுக்கள் உற்பத்தி பணிகளை தொடங்கி உள்ளனர். மேலும் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் வயல்களில் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வண்ணம் நீர் நிரம்பி தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நெல் விதைகள் தூவி விட்ட பின்பு சுமார் 16 நாட்களுக்கு பிறகு நெல் நாற்றுக்கள் பச்சை நிறத்தில் லேசாக முளைத்து மேலே எழும்பி விடும். அதன் பின்பு இந்த நெல் நாற்றுக்கள் மேலும் 20 முதல் 30 நாட்களுக்கு பச்சை, பசேலென்று நன்கு வளர்ந்த பிறகு விதை நெல் வயல்களில் இருந்து நெல் நாற்றுக்கள் வெளியே எடுக்கப்பட்டு டிராக்டர் மூலம் சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டு நெல் நடவு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும். பலத்த மழை மேலும் இப்பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி சீராக நடைபெறுவதற்கு போதிய மழை பெய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த வாரம் ஒருமுறை மட்டுமே மழை பெய்து உள்ளது. ஆனாலும் நெல் சாகுபடிக்கு ஏற்ற நல்ல பலத்த மழை ஏதும் இப்பகுதிகளில் இதுவரை பெய்யவில்லை. எனவே இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி சீராக நடைபெற நல்ல மழை பெய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். இப்பகுதிகளில் கீழ்பவானி பாசன கால்வாய் தண்ணீரை பயன்படுத்தியும், பலத்த மழை பெய்யும் சூழலிலும் வழக்கம் போல் இந்த ஆண்டும் தொடங்கப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெற்பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு