கோவை: செந்தில் பாலாஜி ஜாமீனில் வந்து, தமிழக அரசின் முழு ஆதரவோடு சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே, நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வந்தாலும் கூட தீவிரமாக அவரை கண்காணிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
தமிழக பாஜக ரியாக்ஷன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருப்பது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அதிக நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் காரணத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தது. தற்போதும் இருக்கிறது. தற்போது தமிழக அரசின் முழு ஆதரவோடு சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே, நிபந்தனை ஜாமீனில் செந்தில் பாலாஜி வந்தால் கூட தீவிரமாக அவரை கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள நபர்கள் அனைவரும் வழக்கு விசாரணையை விரைந்து நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் சாட்சிகளை அவர்கள் மிரட்டுவது என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. சொன்னதே ஸ்டாலின் தான்: இப்போது இருக்கக்கூடிய திமுக அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்போதும் நியாயமான விசாரணைக்கு அனுமதிப்பது இல்லை. இது அவர்களுடைய வரலாறு. திமுக அரசு இன்று அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை நீர்த்துப்போகாமல் குறிப்பாக குற்றச்சாட்டு கொடுத்திருப்பவர்களை மிரட்டுவதோ, வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்பது எங்களின் வேண்டுகோள்.
செந்தில் பாலாஜி மீது என்னென்ன ஊழல் வழக்குகள் உள்ளன என்பதை வேறு யாரோ சொல்லவில்லை. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினே வாக்குமூலம் அளித்துள்ளார். முதலமைச்சருக்கு இவ்வளவு குறைந்த காலத்தில் மறதி வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதனை முதலமைச்சர் மறந்திருக்கலாம். ஆனால் மக்கள் மறக்கமாட்டார்கள். இது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட வழக்கு. நீதிமன்றமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த அரசு செயல்பட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
சாட்சிகளை கலைக்க முயல்வார்: செந்தில் பாலாஜி, மாநில அரசின் ஆதரவை பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். இவர் உள்ளேயே இருந்தால் கூட வெளியில் அரசியல் நடத்தியவர் என ஊடகங்கள் சொன்னதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மீண்டும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், செல்வாக்கு மிக்க பதவிக்கு வந்தால் நிச்சயமாக அது சாட்சிகளை பாதிக்கும். எனவே முதலமைச்சர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அரசு ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளாது என எப்படி முதலமைச்சர் பேசிக் கொண்டு இருக்கிறாரோ அதனை செயலிலும் காட்ட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் மத்திய அரசின் அமைப்புகள் தங்களின் பணிகளை சரியாக செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.