புதுடெல்லி:
புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய பாடத்திட்டம், இதுவரை 4 தடவை மாற்றப்பட்டுள்ளது. கடைசியாக, 2005-ம் ஆண்டு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் இப்பணி நடந்து வருகிறது. இது இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு, 2024-2025 கல்வி ஆண்டில் இருந்து இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
கொரோனா காலத்தில், ஒருமுறை நடவடிக்கையாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு இருபருவ தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பழைய பாணியிலேயே ஆண்டு இறுதி தேர்வாக நடத்தப்பட்டது.
இருப்பினும், வரைவு தேசிய பாடத்திட்டத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு மீண்டும் இருபருவ தேர்வு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு இருபருவ தேர்வு முறை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இறுதி மதிப்பெண்ணுக்கு முந்தைய வகுப்புகளின் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அறிவியல், கலை அல்லது மனிதநேயம், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் எந்த படிப்பையும் கலந்து படிக்கலாம். அந்த வழக்கத்தை ரத்து செய்யவும் வரைவு தேசிய பாடத்திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு