இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர்.அம்பேத்கர் லண்டனில் உள்ள கிங் ஹென்றி சாலையில் அமைந்துள்ள வீட்டில் 1921 முதல் 1922-ம் ஆண்டு வரை தங்கி இருந்தார். லண்டனில் அவர் வாழ்ந்த வீடு கடந்த 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டை வாங்க அம்பேத்கரின் ஆதரவாளர்கள் மற்றும் புத்த அமைப்புகள் மராட்டிய அரசை வலியுறுத்தினர். இதையேற்று 2 ஆயிரத்து 50 சதுர அடி கொண்ட அந்த 3 மாடி வீட்டை அருங்காட்சியகமாக மாற்றும் எண்ணத்துடன் 3.1 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து மராட்டிய அரசு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கியது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தநிலையில் லண்டனில் உள்ள அம்பேத்கரின் இல்லத்தின் கட்டுப்பாட்டை வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு மராட்டிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த தகவலை மராட்டிய முதல்வர் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
