ஆதவ் அர்ஜுனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை, இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்வைத்துள்ள நிலையில், அதுகுறித்த உண்மைத்தன்மையை ஆராயும் முயற்சியில், வி.சி., தலைவர் திருமாவளவன் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 2019 லோக்சபா, 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல் என, பல தேர்தல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி சந்தித்துள்ளது. இத்தேர்தல்களில், தொடர்ச்சியாக வெற்றி பெற்று, தனது ஓட்டு வங்கியை அக்கட்சி நிரூபித்து வருகிறது.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறி விடும் என்ற தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணி அல்லது நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, வி.சி., பயணிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, அதற்கு அச்சாரமிடுவது போல, சமீப காலமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது வி.சி.,யின் இரண்டாம் கட்ட தலைவர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வி.சி.,யின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது சமூக வலைதளங்களில் மறைமுக தாக்குதல் துவங்கியுள்ளது. பல்வேறு அவதுாறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால், இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால், கட்சியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட தலைவர்களை சமரசம் செய்யும் முயற்சியில், திருமாவளவன் இறங்கியுள்ளார். இதற்காக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில், இரவு 9:00 மணிக்கு துவங்கி, அதிகாலை 2:30 மணி வரைக்கும் பேச்சு நடந்துள்ளது.
அப்போது, தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணகர்த்தா யார் என்பதை, ஆதாரப்பூர்வமாக கட்சித் தலைவர் திருமாவளவன் கவனத்திற்கு இரண்டாம் கட்ட தலைவர்கள் கொண்டு சென்றுள்ளனர். கட்சியை வளர்ப்பதற்காக, சென்னையில் சிறிய அறையில் தங்கி, ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்ட நிகழ்வுகளையும் கூறி, பலர் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதைக் கேட்டு திருமா வளவனும் கண்கலங்கிஉள்ளார். தி.மு.க., கூட்டணிக்கு குண்டு வைக்கத்தான் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சிகளால் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என்ற புகாரையும் பலர் வாசித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனாவின் முந்தைய கால செயல்பாடுகள், தற்போதைய செயல்திட்டம் குறித்தும் எடுத்துக்கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மையை ஆராயும் நடவடிக்கையில் திருமாவளவன் இறங்கியுள்ளார். அதுவரைக்கும், பத்திரிகை, மீடியா என கூட்டணி தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என, ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.