சென்னை:
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா
மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான தகவல் வெளியான உடனேயே எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதினார். நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்படாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. நெற்களத்தில் நிலக்கரியா என டெல்டா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்று டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
அதிமுக
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த அதிமுக வலியுறுத்தியுள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
காங்கிரஸ்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசினார். டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காதது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டார்.
பாமக
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த பாமக வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். திட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு நன்றி. தஞ்சை தரணி என்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தடுத்து நிறுத்த வி.சி.க. வலியுறுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது வி.சி.க. உறுப்பினர் சிந்தனைச்செல்வன் பேசினார். விவசாயிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முதலமைச்சர் வலுவான கடிதத்தை ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு:
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினர். தமிழ்நாடு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதாக ஜவாஹிருல்லா கூறினார்.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்க்கும் என தெரிந்தும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது என ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு தமிழ்நாடு விரோத கொள்கைகளை கடைபிடித்து வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று வேல்முருகன் சாடினார்.
தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மாற்றக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு பா.ஜ.க. கடிதம் எழுதியுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.