நாமக்கல்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்றிரவு நாமக்கல்லுக்கு வந்தார். அவருக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவில் நளா ஓட்டலில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் அழகு நகரில் உள்ள நகராட்சி பள்ளிக்கு திடீரென சென்றார். தொடர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்தார்.
அப்போது அருகில் இருந்த மாணவ-மாணவிகளிடம் போதுமான அளவு சாப்பாடு வழங்கப்படுகிறதா, அந்த உணவு சுவையாக உள்ளதா, ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் இந்த உணவை வழங்க வேண்டும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பான ரெக்கார்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகையை அதிகரிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு கிடைக்கும் வகையிலும், மாணவர்கள் கால தாமதமாக வருவதை தடுக்கும் வகையிலும், வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அப்போது வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, கலெக்டர் ஸ்ரேயாசிங் உள்பட பலர் உடன் இருந்தனர்.